அகமதாபாத்:மும்பையை சேர்ந்த 19 வயது மாணவி இஷ்ரத் ஜஹான், ஜாவீத் ஷேக், ஜவஹர், அம்ஜத் அலி உள்ளிட்ட 4 அப்பாவிகளை குஜராத்தின் அஹமதாபாதில், கடந்த 2004ல் “போலி” என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்த வழக்கில், குஜராத்தின் “கிரைம் ரெக்கார்ட் பீரோ”வின் எஸ்.பி.யான, ஜி.எல்.சிங்காலை, சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர்.
போலி என்கவுண்டர் வழக்கின் எப்.ஐ.ஆரில், முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சிங்கால், கைது செய்யப்பட்டுள்ளது குஜராத் அரசுக்கு மிகப்பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இவர் மீது, கொலை செய்தது (302), சாட்சியங்களை அழித்தது (201) உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐ.பி.எஸ். அதிகாரியான சிங்கால், 2004ல் குற்றப்பிரிவின் அசிஸ்டன்ட் கமிஷனராக இருந்து, போலியான முறையில் என்கவுண்டரை நிகழ்த்தியவர். இந்த வழக்கில், இவர் தவிர மேலும் 20 அரசு அதிகாரிகளும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment