January 22, 2013

படித்தவர்களும் சாதியைப் பார்த்தே வாக்களிக்கின்றனர் – கட்ஜு கவலை!



Markandey Katju

புதுடெல்லி:இந்தியாவில் படித்தவர்கள் கூட சாதியைப் பார்த்தே வாக்களிக்கின்றனர் என்று ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மனும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.
டெல்லியில் “வோட் ஃபார் இந்தியா’ என்ற வாக்காளர் விழிப்புணர்வு அமைப்பின் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: வாக்களிக்கச் செல்லும்போது,வேட்பாளர்களின் தகுதியை
ஆராயாமல் ஜாதி அடிப்படையிலேயே 90 சதவீத வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். படிக்காதவர்கள் மட்டுமின்றி, படித்தவர்களும் இப்படித்தான் இருக்கின்றனர். பேராசிரியர்களும், வழக்குரைஞர்களும் கூட ஜாதி அடிப்படையில்தான் வாக்களிக்கிறார்கள். நாடு அந்த அளவுக்கு பின்தங்கி உள்ளது.
மக்கள் தங்கள் ஜாதிக்காரர் என்று கருதி வாக்களித்ததாலேயே குற்றப்பின்னணி உள்ள பலரும் தேர்தலில் வென்றுள்ளனர்.ஜனநாயகம் என்பது தொழில்துறை சார்ந்த சமூகத்தின் பண்பாகும். இது பண்ணையார் முறை நிலவும் விவசாயச் சமூகத்தின் பண்பு அல்ல. இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 வரை இந்தியாவும்
பண்ணையார் முறை கொண்ட விவசாயச் சமூகமாகவே இருந்தது. இந்தியாவைத் தொழில்மயமாக்காமல் வைத்திருக்க வேண்டும் என்பதே ஆங்கிலேயரின் கொள்கையாக இருந்தது.
÷நாடு விடுதலை பெற்றபோது, நமது முன்னோர்கள் மேற்கத்திய பாணியிலான அரசியல் சாசனத்தை உருவாக்கினர். பின்தங்கிய நிலையில் இருந்தும், ஆண்டான்-அடிமை சித்தாந்தத்தில் இருந்தும் சமூகத்தை உயர்த்துவது, அதை நவீன தொழில் யுகத்துக்கு அழைத்துச் செல்வதுமே அவர்களது நோக்கம்.இதனால் தொழிற்சாலைகள் அமைந்து, நாடு முன்னேறியது. ஆனால், இடையில் பரம்பரைச் சக்திகள் தலைதூக்கியதன் விளைவாக
மக்கள் ஜாதி அடிப்படையில் வாக்களிக்கத் தொடங்கினர் என்றார் கட்ஜு.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்களவை துணைத் தலைவர் கரிய முண்டா பேசுகையில், “நாட்டில் படித்தவர்கள் உள்பட கணிசமான மக்கள் வாக்களிக்கச் செல்வதே இல்லை. வாக்களிப்பதால் என்ன பயன் என்று பலரும் நினைக்கிறார்கள். ஒவ்வொருவரும் இதேபோல் சிந்தித்தால், வாக்குப்பதிவே நடக்காது” என்று சுட்டிக் காட்டினார்.

No comments:

Post a Comment