புதுடெல்லி:கழிவுகளை மனிதர் அள்ளுவதைத் தடை செய்யும் சட்டத்தை இயற்றத் தவறியதற்காக, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்எல் தத்து, சி.கே. பிரசாத் ஆகியோரடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனிதக் கழிவுகளை மனிதர் அகற்றுவது மற்றும் சாக்கடைக் கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதைத் தடை செய்யும் சட்டம் விரைவில் இயற்றப்படும் எனப் பலமுறை உறுதியளிக்கப்பட்டும் இதுவரை அதைச் செயல்படுத்தாதற்காக மத்திய அரசுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது அரசு தலைமை வழக்குரைஞர்; “இது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நிலைக்குழுக் கூட்டம் 2ஆவது முறையாக வரும் 11ஆம் தேதி கூடுகிறது. வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, நிலைக்குழு தன் அறிக்கையைச் சமர்ப்பிக்கும்” என்றார்.
முன்னதாக இது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. “மனிதர்கள் கழிவை அள்ளுவதை 2 மாதத்தில் தடுக்காவிட்டால், அரசின் உயர் அதிகாரத்தில் இருப்பவர்களில் ஒருவரை நேரில் ஆஜராக உத்தரவிடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment